இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சீன நிறுவனங்களின் முதலீடு, கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி தாக்கியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து, சீனாவை புறக்கணிக்க வேண்டும் எனவும், சீனா மீதான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் எனவும் பலதரப்பில் இருந்து குரல் எழுந்தன. இதனையடுத்து, சில சீன நிறுவனங்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சீன முதலீடுகள் 12 மடங்கு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குளோபல் டேட்டா நிறுவனம், சர்வதேச தொழில் ஒப்பந்தங்களின் அடிப்படையில் திரட்டியுள்ள தகவல்களின்படி, இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சீன முதலீடு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது 2016ல் 38.1 கோடி டாலராக மட்டுமே இருந்த சீன முதலீடு 2019ம் ஆண்டில் 460 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலுள்ள 24 முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சீனாவைச் சேர்ந்த பெருநிறுவனங்கள் பல்லாயிரம் கோடி டாலர் முதலீடு செய்துள்ளன. குறிப்பாக, அலிபாபா, டென்செண்ட் ஆகிய நிறுவனங்களே இந்திய நிறுவனங்களில் அதிகமாக முதலீடு செய்துள்ளன. அலிபாபா நிறுவனமானது பேடிஎம், ஸ்னாப்டீல், பிக்பேஸ்கட், சொமாட்டோ ஆகிய நான்கு நிறுவனங்களில் மட்டும் 260 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. 

அதேபோல், டென்செண்ட் நிறுவனமானது ஓலா, ஸ்விகி, ஹைக், ட்ரீம்11, பைஜூஸ் ஆகிய 5 நிறுவனங்களில் 240 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது.இந்த இரு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், டிடி சுஷிங், மெய்துவான் டியன்பிங், போசன், ஷுன்வே கேபிடல், ஹுல்ஹவுஸ் கேபிடல் குரூப், சீனா லாட்ஜிங் குரூப் ஆகிய சீன முதலீட்டாளர்களும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பல கோடி டாலர் முதலீடு செய்துள்ளன.