ஜம்மு காஷ்மீரில் இஸ்லாம் மதம் தவறாக பயன்படுத்தப்படுவதாக ராணுவ தளபதி பிபின் ராவத் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான சந்திப்பு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இச்சந்திப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய சென்னை வந்த பிபின் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீரில் இஸ்லாம் மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அங்கு மதத்தின் பெயரால் தீவிரவாதம்தான் பரப்பப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் அவர்களை இயக்குகிற பாகிஸ்தானியர்களுக்கும் இடையேயான தகவல்தொடர்புதான் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதில், தகவல் தொடர்பில் எந்த பிரச்சனையும் இல்லை.

காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காகவே போர் நிறுத்த ஒப்பந்தங்களை பாகிஸ்தான் மீறுகிறது. அந்த நாட்டின் இந்த அணுகுமுறையை எப்படி எதிர்கொள்வது என்பது நமது ராணுவத்தினருக்கு தெரியும்.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் ராணுவத்தினர் அதிகபட்ச உஷார் நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.