புதிதாக மக்கள் நலத் திட்டம் ஏதும் ஓராண்டுக்கு கிடையாது என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொருளாதார நெருக்கடி தீவிரமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு புதிய திட்டம் எதையும் ஓராண்டுக்கு செயல்படுத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிற அமைச்சகங்களும் புதிய திட்டத்துக்கு நிதி ஒதுக்குமாறு நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை அனுப்ப வேண்டாம் என்றும், புதியதிட்ட செலவுகளை நிறுத்துமாறும் நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
பிரதமரின், 'கரிப் கல்யாண்' திட்டம் மற்றும் சமீபத்தில் பொருளாதாரத்தை முடுக்கிவிட அறிவிக்கப்பட்ட ஆத்ம நிர்ப பாரத் திட்டத்துக்குமட்டும் செலவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் எந்த புதிய திட்டத்துக்கும் அனுமதி கிடையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து பொதுநல திட்ட செலவையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இதற்காக பிற திட்டப் பணிகளை நிறுத்தி வைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. பட்ஜெட்டில் அனுமதிக்கப்பட்ட திட்ட செலவுகள் அனைத்தும் மார்ச் 31-ம் தேதியில் இருந்து நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விலக்கு பெறும் சில திட்டப் பணிகளுக்கான அனுமதியை செலவுக் குழு துறையின் அனுமதி பெற்று நிறைவேற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 Comments