சென்னை தவிர்த்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மே 31ம் தேதி வரை மாநிலத்தில் பல்வேறு கட்டமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்பிறகு ஊரடங்கு விதிகளில் தளர்வு அறிவிக்கப்பட்டது. சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பொது போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 19ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே இருந்தது. குறிப்பாக மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவியது. இதனால் மதுரையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு ஜூலை 14ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜூலை 1ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.

அதேநேரம், வரும் 31ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த வித தளர்வும் இன்றி குறிப்பாக அவசர மருத்துவ தேவை, பால், பத்திரிகை விற்பனையை தவிர அனைத்துக்கும் தடை விதித்து பொது முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, மூன்றாவது வாரமாக இன்று தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நள்ளிரவு 12 மணி முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால், தமிழக நகரங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதன்படி, நள்ளிரவு 12 மணி முதல் தமிழகத்தில் உள்ள 37 மாவட்ட எல்லைகள் மற்றும் வெளிமாநில எல்லைகளும் மூடப்பட்டன. மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே சென்றால் அவர்கள் மீது எந்த நிபந்தனையும் இன்றி வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல் துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் போலீசார் ‘டிரோன் ’ மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் வெளியே வருவதை தடுக்க இன்ஸ்பெக்டர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.