மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு எதிர்க்கட்சித் தலைவராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இருந்து வருகிறார்.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் நேற்று தலையங்கம் வெளியானது. அதில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசுமேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை, தேவேந்திர பட்னாவிஸ் கடந்த ஒரு மாத காலமாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிர அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, தனக்கு ஒருவேளை கரோனா வைரஸ் காய்ச்சல் வந்தால்கூட அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுவேன் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு, ஆளும் அரசின் நடவடிக்கைகளை அவர் பாராட்டி இருக்கிறார். மகாராஷ்டிர முதல்வராக துடிப்புடன் பணியாற்றிய பட்னாவிஸ், தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.