தங்க கடத்தல் வழக்கில் தலைமறைவான கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் ஸ்வப்னா சுரேஷ் தமிழ்நாட்டில் தலைமறைவாகி முன் ஜாமீன் பெற முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை 4 ஆம் தேதி, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாடுகள் தூதரகத்துக்கு உணவுப்பொருள் என்ற பெயரில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் யு.ஏ.இ தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸரித் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் இந்த பொருட்களுக்கு உரிமை கோரியவர்களில் ஒருவர் என்றும் சுங்கத் துறை வட்டராங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின. ஸ்வப்னா கேரள தலைமைச் செயலகத்தில் ஐ.டி துறை ஆபரேஷனல் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கேரள அரசின் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஸ்வப்னா தங்க கடத்தல் வழக்கில் சிக்கியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், தங்க கடத்தலில் சிக்கிய ஊழியரை காப்பாற்ற முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகம் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனக் கேரள காங்கிரஸ் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா கோரிக்கை வைத்துள்ளார்.
ஸ்ரித்துடன் கூட்டணி வைத்து தங்கம் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் திடீரென்று தலைமறைவாகினார். இப்போது அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஸ்வப்னா தமிழ்நாட்டில் தலைமறைவாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டே ஸ்வப்னா, திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலராமபுரம் வழியாக ஸ்வப்னா தமிழகம் வந்தாகவும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளன. இதனைத்தொடர்ந்து ஸ்வப்னாவை தேடி அதிகாரிகள் தமிழகம் வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.






0 Comments