நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வசந்தகுமார் எம்.பி., 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை எந்தவித பணபலன்களும் வழங்காத போக்குவரத்துக்கழக நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக பண பலன்களை வழங்க கோரியும் நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல தலைமை அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு அரசு போக்குவரத்துக்கழக ஐ.என்.டி.யு.சி.யைச் சேர்ந்த பொன்.ராஜா தலைமை தாங்கினார். ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் நிர்வாகியும், எச்.எம்.எஸ். மாநில பொதுச்செயலாளருமான சுப்பிரமணியபிள்ளை, மாநில தலைவர் முத்துக்கருப்பன், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் பால்ராஜ், நாகராஜன், ஓய்வுபெற்றோர் கூட்டமைப்பு நிர்வாகி ஹென்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக எச்.வசந்தகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.






0 Comments