குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வட்டக்கரையில் உயர் அழுத்த மின்சாரம் காரணமாக வீடுகளில் மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறி தீப்பிடித்தன. இதில் 25க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார சாதன பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன.
குமரி மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மிதமான மழையும் சூறை காற்றும் வீசியது. இதன்காரணமாக உயர் மின்னழுத்தம் ஏற்பட்டது. உயர் மின் அழுத்தம் காரணமாக நாகர்கோவில் வட்டக்கரை காமராஜர் சாலையில் உள்ள வீடுகளில் மின்சாரப் பொருட்கள் வெடித்து சிதறி நாசமாயின. வீட்டில் இருந்த ப்ரிட்ஜ் ஒயர்கள் எரிந்து வீட்டினுள் தீ பிடித்தது. அருகில் உள்ளவர்கள் ஓடிச் சென்று தீயை அணைத்தனர். அங்கிருந்த 2 சிலிண்டர்கள் தீ பிடிக்காமல் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் அந்த பகுதியில் 25க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, ப்ரிட்ஜ், அலங்கார மின் சாதன பொருட்கள், மின்விளக்குகள் போன்றவர்கள் உயர் அழுத்த மின்சாரத்தால் நாசமாகி உள்ளன.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்த போதும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் அடிக்கடி இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் இதனை தடுக்க மின் வாரிய அதிகாரிகளும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.