நாகர்கோவில் மாநகராட்சி ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை அடுத்த ஆளூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண், நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கான பரிசோதனை முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில் மாநகராட்சி எலக்ட்ரீசியனுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருடைய குடும்பத்தினருக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவு அலுவலகங்களுக்கும் எலக்ட்ரீசியன் சென்று வந்துள்ளார். இதனால் நேற்று மாநகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இந்த தடுப்பு நடவடிக்கைக்கு பிறகு மாநகராட்சி அலுவலகம் மூடப்பட்டது. ஆனால் பணிகள் போல் நடந்தது. அதே சமயத்தில், பொதுமக்கள் வந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களில் எலக்ட்ரீசியனுடன் தொடர்புடைய 65 பேருக்கு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சி என்ஜினீயரின் வீட்டுக்கும் எலக்ட்ரீசியன் நேற்று முன்தினம் பழுதுபார்க்கும் பணிக்காக சென்று வந்துள்ளார். இதனால் மாநகராட்சி என்ஜினீயர் அவருடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு இன்னும் 5 நாட்கள் கழித்து சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்ஷால் தெரிவித்தார்.