ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜ் புனிதப்பயணத்தில் பங்குபெறும் ஹஜ் பயணிகளுக்கு, இந்த ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகளை சவூதி அரசு அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஹஜ் புனிதப்பயணமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் ஹஜ் பயணத்தில் உலகம் முழுவதிலும் இருந்து சராசரியாக இருபது லட்சம் பேர் பங்குபெறுவது வழக்கம். இதன்மூலம் அந்நாட்டு அரசுக்கும் கணிசமான வருவாய் கிடைக்கும்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஹஜ் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை சவூதி அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த முறை ஹஜ் பயணத்திற்கு சவூதி குடிமக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

சவூதி குடிமக்கள் அல்லாதவர்கள் முன்னரே சவூதி எல்லைக்குள் வசித்து வந்தால், ஹஜ் பயணத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஒட்டுமொத்த பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 1000 என்று நிர்ணயிக்கப்படுகிறது. சமூக இடைவெளி விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படும்.

புனித அடையாளமான காபாவை பயணிகள் கையால் தொடுவது தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.