தேங்காப்பட்டணத்தில் தடைக்காலத்தை மீறி மீன்பிடிக்க வந்த தூத்துக்குடி விசைப்படகை மீனவர்கள் சிறைபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை மீனவ கிராமங்களான சின்னமுட்டம் முதல் நீரோடி காலனி வரை தற்போது மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடைக்காலம் வருகிற 31-ந் தேதி வரை உள்ளது. அதே சமயத்தில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கினர்.
இந்த நிலையில் நேற்று காலை தேங்காப்பட்டணம் துறைமுகத்திற்குள் ஒரு விசைப்படகு வந்தது. உடனே அந்த பகுதியில் வலை பின்னல் உள்ளிட்ட வேலைகள் செய்து கொண்டிருந்த மீனவர்கள் படகை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். அந்த படகில் 8 மீனவர்கள் இருந்தனர். அந்த மீனவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் என்றும் தடைகாலத்தை மீறி அரபிக்கடல் பகுதியில் சென்று மீன்பிடித்ததாகவும், தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மீன்களை விற்பனை செய்ய வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து தூத்தூர் மண்டல மீனவர்கள் குளச்சல் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து அங்கு வந்த நாகர்கோவில் மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி மற்றும் குளச்சல் மீன்வளத்துறை ஆய்வாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் தடை செய்யப்பட்ட பகுதியில் எந்தவித அனுமதியும் இல்லாமல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு அபராதம் விதித்தும், மீனவர்கள் பிடித்து வந்த மீனையும் ஏலமிட்டு மற்ற மீனவர்களுக்கு வழங்கினர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






0 Comments