மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள லாக்டவுன் விதிகளை மீறி கூட்டம் கூட்டியதாக கூறி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணை தலைவர் கனகசபாபதி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த பிறகு முதன்முறையாக கோவைக்கு வந்த அவருக்கு சித்தாப்புதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பாஜக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இளைஞர்கள் பாஜகவிற்கு அதிக அளவில் வாக்களிப்பார்கள் என்று கூறினார்.
கொரோனா லாக்டவுன் விதிமுறைகள் அமலில் உள்ள இந்த நேரத்தில் எப்படி இத்தனை நிர்வாகிகள் ஒன்றிணைந்தார்கள் என்ற சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் இன்று அண்ணாமலை, எஸ்.ஆர்.சேகர் உள்பட 5 பேர் மீது காட்டூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லாக்டவுன் விதிகளை மீறி கூட்டம் கூட்டியதாக அண்ணாமலை, பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணை தலைவர் கனகசபாபதி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா லாக்டவுன் விதிகளை மீறி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 143, 341, 269, 285 ஆகியவற்றின் கீழும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவு 3ன் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.






0 Comments