சென்னையைச் சேர்ந்த சஞ்சனா என்ற 5 வயது சிறுமி 13.5 நிமிடங்களில் 111 அம்புகளை தெறிக்கவிட்டுள்ளார். இதுல என்னப்பா ஆச்சரியம் இருக்கிறது என்று கேட்பது புரிகிறது. அவர் அம்புகளை பறக்கவிட்டது தலைகீழாக தொங்கி கொண்டு என்பதுதான் இதன் ஸ்வாரஸ்யமே. நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
இந்த சாதனை மூலம் Human Ultimate World Recordsல் இவரது பெயர் பதியப்பட்டுள்ளது. இவருக்கு தமிழகத்தில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த சாதனையை இவர் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சென்னையில் நிகழ்த்தினார். தலைகீழாக தொங்கி இவருக்கு பயிற்சி அளித்த ஷிஹன் ஹூசைனி கூறுகையில், ''தலைகீழாக தொங்கிக் கொண்டு 13.5 நிமிடங்களில் 111 அம்புகளை எய்துள்ளார். 

இது உலக சாதனை. இதுவரை யாருமே இது மாதிரியான சாதனையை நிகழ்த்தவில்லை. கின்னஸ் உலக சாதனைக்கும் இவரது சாதனையை அனுப்ப முடிவு செய்துள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார். பிரமோத் சந்துர்கர்
இந்த நிகழ்வின்போது தலைமை விருந்தினராக கலந்து கொண்டிருந்த இந்திய அம்பு எய்துவோர் கழகத்தின் தலைவர் பிரமோத் சந்துர்கர் கூறுகையில், ''சஞ்சனா உலக சாதனை படைத்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் டெல்லி அம்பு எய்துவோர் கழகத்தின் தலைவர் வீரேந்திர சச்தேவாவும் கலந்து கொண்டார்.

இந்திய அம்பு எய்துவோர் கழகத்தின் தலைவர் ஆன் லைன் மூலம் இந்த நிகழ்வை உறுப்பினர்களுடன் பார்வையிட்டார். சஞ்சனாவின் சாதனையை இவர்கள் கின்னஸ் ரெக்கார்டுக்காக அனுப்பி வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சஞ்சனாவின் தந்தை அளித்திருந்த பேட்டியில், ''சஞ்சனாவுக்கு வயது 10 ஆகும் வரை ஒவ்வொரு ஆண்டும் ஒரு சாதனையை நிகழ்த்த பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர் 2032ஆம் ஆண்டில் நடக்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படும். ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு நாட்டுக்கு பல பதக்கங்களை சஞ்சனா கொண்டு வருவார்'' என்றார். 
சமூக வலைதளங்களில் பலரும் சஞ்சனாவை புகழ்ந்து வருகின்றனர். குழந்தை அறிவாளி, போர் வீரர் என்று புகழ்ந்து தள்ளியுள்ளனர்.