தேசிய அளவிலான கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் தமிழகத்தை, உத்தர பிரதேசம் முந்தியுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 76,472 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3-வது நாளாக நேற்றும் புதிய தொற்று 70 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது.

ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 34,63,972 ஆக உயர்ந்துள்ளது. இதில் 26,48,998 பேர் குணமடைந்துள்ளனர். 7,52,424 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 1,021 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 62,550 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் 7,47,995 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5,43,170 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 23,775 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் 4,03,616 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,03,711 பேர் குணமடைந்துள்ளனர். 96,191 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3,714 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் 3,18,752 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,368 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் 2,13,824 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,57,879 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 3,294 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை கணக்கிட்டு மத்திய சுகாதாரத் துறை பட்டியல் வெளியிட்டு வந்தது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் சுகாதாரத் துறை பட்டியல் தயாரிக்கிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. ஆந்திரா, கர்நாடகா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கடந்த சில வாரங்களாக தமிழகம் 4-வது இடத்தில் இருந்தது.
மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், தமிழகத்தை முந்தி உத்தர பிரதேசம் 4-வது இடத்துக்கு சென்றது. அந்த மாநிலத்தில் 52,651 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுகின்றனர். தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. சுகாதாரத் துறையின் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி தமிழகத்தில் 52,506 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.
தெலங்கானாவில் 30,008 பேர், ஒடிசாவில் 26,386 பேர், மேற்குவங்கத்தில் 26,349 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் நேற்று 2,397 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71,701 ஆக உயர்ந்துள்ளது. இதில் 48,079 பேர் குணமடைந்துள்ளனர். 23,277 பேர் சிகிச்சையில் உள்ளனர். 280 பேர் உயிரிழந்துள்ளனர்.






0 Comments