ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னை நந்தம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. குறிப்பாக கொரோனா தடுப்புப் பணியில் முன்கள வீரர்களாக பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்த சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்புக்கு இலக்காகி மரணம் அடைந்தது அனைத்து தரப்பினரையும் கலங்க வைத்தது. நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறவர்களும் பாதுகாப்பு அம்சங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவையை அவரது மரணம் உணர்த்தியது.

இந்தச் சூழலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பழனியும் தனது தொகுதியில் தொடர்ந்து கொரோனா நிவாரணப் பணிகளை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.