நேபாளம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய புதிய வரைபட மசோதாவிற்கு அந்நாட்டு பார்லிமென்டின் கீழ்சபையை தொடர்ந்து மேல்சபையும் இன்று (ஜூன் 18) ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்திற்குட்பட்ட சில பகுதிகளான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகியவற்றை தங்களுக்கு சொந்தம் என கூறிக்கொண்டு நேபாள அரசு புதிய வரைபடத்தை கடந்த மே மாதம் வெளியிட்டது.

இதற்கு மத்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் நேபாள பார்லி.,யின் கீழவையில் கடந்த ஜூன் 10ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டத்திருத்த புதிய வரைபட மசோதா, நீண்ட விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது.
இருநாடுகளிடையேயான எல்லை பிரச்னை தொடர்பாக பேச்சு நடத்த இந்தியாவுக்கு அழைப்பு விடுத்ததாக நேபாளம் கூறியது.இதனை தொடர்ந்து கடந்த ஞாயின்றன்று, புதிய வரைபட மசோதா மேல்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று நடந்த ஓட்டெடுப்பில், மேல்சபை உறுப்பினர்கள் 57 பேரும் ஒருமனதாக மசோதாவிற்கு ஆதரவாக ஓட்டளித்தனர். யாரும் ஆட்சேபனையோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை.
நேபாளத்தின் புதிய வரைபடம் வரலாற்று ரீதியாக தகவல்களோ, ஆதாரமோ இல்லாமல் மாற்றப்படுகிறது. இது நேபாளத்தின் செயற்கையான விரிவாக்கம் என மத்திய அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், 'இருநாடுகள் இடையேயான நிலுவையில் உள்ள எல்லை பிரச்னைகள் குறித்து பேச்சு நடத்துவதற்கான புரிதலை மீறுவதாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது,' என தெரிவித்துள்ளார்.






0 Comments