காவலர்கள் உடலில் கேமிரா!! 4 ஜி தொழில்நுட்பம், ஜி.பி.எஸ் மூலம் உயரதிகாரிகள் கண்காணிக்கின்றனர். இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் அவரது ட்விட்டர் பக்கத்தில் காவலர்கள் உடல் இணை கேமராக்களை பயன்படுத்தும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த உடல் இணை கேமராக்கள் மூலம் வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்களிடம் வாகன ஓட்டிகள் டிராபிக்கில் தவறாக சென்றுவிட்டு முறையற்று பேசுவதும், விதிகளை மீறி செல்வதும், தவறு செய்யவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க இந்த இணை கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.
விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளும், அவர்களை பிடிக்கும் காவலர்களும் என்ன பேசுகின்றனர் என்பதை தெளிவாக இந்த கேமரா பதிவி செய்யும். இதன்மூலம், போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் போக்குவரத்து விதிமீறல்களுக்கு வழக்குகள் பதிவு செய்வதில் வெளிப்படைத்தன்மையும், நம்பகத்தன்மையும் உறுதி செய்யப்படும் என நம்பப்படுகிறது.

தற்போது கொரோனா நேரத்தில் பணியில் ஈடுப்பட்டிருக்கும் காவலர்களுக்கு இந்த கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த உடல் இணை நிழற்படக் கருவிகளில் உள்ள 2 எம்.பி. திறன் கொண்ட கேமராக்கள் மூலமாக ஒலி மற்றும் ஒளி பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம்.

இப்பதிவுகளில் நிகழ்நேர தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை தானாகவே பதிவாகும். கேமராக்கள் வழியாக காணொலி பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம். மேலும், கேமராக்களில் பொருத்தப்பட்டிருக்கும் 4ஜி இணைப்பு மூலமாக கேமராக்களின் நிழற்பட பதிவுகளை, காவல் துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து மேலதிகாரிகள் நேரலையில் கண்காணிக்கலாம்.

போக்குவரத்து அதிகாரிகள் எங்கு வழக்கு பதிவு செய்கிறார்கள் என்பதையும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலமாக வரைபடத்தில் நேரலையில் கண்காணிக்கலாம். இதற்கு பொது மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.