தமிழகத்தில் இன்று (ஜூன் 18) ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,334 ஆகவும், பலி எண்ணிக்கை 625 ஆகவும் அதிகரித்துள்ளது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று மேலும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 50 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 52,334 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 81 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 26,736 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 7,63,506 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

இன்று சென்னையில் 40 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், திருவண்ணாமலை, கடலூர், விக்கிரவாண்டி, திருவள்ளூரில் தலா ஒருவரும் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய உயிரிழப்புகளில் 36 பேர் அரசு மருத்துவமனையிலும், 13 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,017 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 28,641 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 23,065 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.