குமரி மாவட்டத்திற்கு வெளிமாவட்டம், மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. தற்போது மாவட்டத்திற்கு உள்ளும் பாதிப்பு தீவிரமாகியுள்ளது. வழக்கமாக பிறமாவட்டங்களில் இருந்து குமரிக்கு வருபவர்கள் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் சளி பரிசோதனை நடத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தமிழக முதல்வரின் உத்தரவுபடி நேற்று முதல் மண்டலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வேறுமாவட்டத்தை சேர்ந்தவர்கள் இ-பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்றுகாலையில் ஆரல்வாய்மொழி வழியாக குமரி மாவட்டத்திற்கு வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்தவர்களை ஏராளமானோர் வாகனங்களில் வந்தனர். அவர்களை செக்போஸ்ட்டில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் இ-பாஸ் சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு அதன்பின்னரே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிவப்பு மண்டலத்தில் இருந்து வந்தவர்களுக்குசளி மாதிரி எடுக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இதனால் செக்போஸ்ட்டில் பகுதியில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து கிடந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.