மணவாளக்குறிச்சி அருகே மூதாட்டி அடித்து கொலை. கிரிக்கெட் மட்டையால் பாட்டியை பேரனே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணவாளக்குறிச்சி அருகே உள்ள திருநயினார்குறிச்சி சரல் பகுதியை சேர்ந்தவர் செல்லம் 85. இவர் தனது வீட்டு முன் உள்ள பாதையில் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் செல்லத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது மூதாட்டியின் பேரன் ரதீஷ் 27 என்பவர் சந்தேகத்திற்கு இடமாக உடம்பில் ரத்த கறையோடு சுற்றி திரிந்தார். இதை பார்த்த போலீசார் ரதீஷை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பல தகவல்கள் வெளியானது. மூதாட்டி செல்லம் தனது மகன் வீட்டில் வசித்து வந்துள்ளார். மகன் மற்றும் மருமகள் வெளியூர் சென்ற நிலையில் பேரன் ரதீஷ் உடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது குடும்ப பிரச்னை சம்பந்தமாக இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் விரக்தியில் இருந்த ரதீஷ் அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது பாட்டி செல்லத்தை கிரிக்கெட் மட்டையால் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த செல்லம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து செல்லத்தின் சடலத்தை வீட்டின் முன் பகுதியில் போட்டுவிட்டு ரதீஸ் அங்கேயே சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரதீஷை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் ரதீஷ் திருமணம் ஆகாமல் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. பாட்டியை பேரனே கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.