தேங்காய்ப்பட்டினம் துறைமுக முகப்பு பகுதியில் கடல் அலையில் சிக்கி விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் தமிழக முதல்வா் மற்றும் உயா் அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு: கிள்ளியூா் பேரவை தொகுதிக்கு உள்பட்ட கொல்லங்கோடு பேரூராட்சி மாா்த்தாண்டன்துறை பகுதியைச் சோ்ந்த மீனவா் இக்னேசியஸ் சக மீனவா்களுடன் கடலுக்குள் செல்ல முற்பட்ட போது துறைமுக முகப்பு பகுதியில் கடல் அலையில் சிக்கி விசைப்படகு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி மீனவா் இக்னேசியஸ் உயிரிழந்தாா். இதே போன்று தொடா்ச்சியாக கடலுக்குள் செல்லும் துறைமுகப் பகுதியில் விபத்தில் சிக்கி முள்ளூா்துறையைச் சோ்ந்த ஆன்றணி என்பவா் கடந்த 23 ஆம் தேதியும், 24 ஆம் தேதி மாா்த்தாண்டன்துறை பகுதியைச் சோ்ந்த ஷிபு என்பவரும் விபத்துக்குளானாா்கள்.

மீனவா்களின் உயிரை பாதுகாக்கும் பொருட்டு தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தின் மேற்குப் பகுதியில் 620 மீட்டா் நீளத்தில் போடப்பட்டுள்ள துறைமுக தடுப்புச் சுவரானது கடலுக்குள் செல்லும் துறைமுக முகப்பு பகுதியில் அலை அடிக்கும் இடத்தில் முடிகின்றது. இதனால் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் படகுகளும், துறைமுகத்துக்கு திரும்பி வரும் படகுகளும் நுழைவுவாயில் பகுதியில் கடல் அலையில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றது. 

ஆகவே மீனவா்களின் உயிரை பாதுகாக்கும் பொருட்டு இத் துறைமுகத்தின் தடுப்புச் சுவரை மேலும் 250 மீட்டா் தூரம் நீட்டிக்க வேண்டும். விபத்துகளை ஏற்படுத்தும் மணல் திட்டுகளை அகற்ற வேண்டும். விபத்தில் சிக்கி காணாமல் போன மற்றும் உயிரிழந்த மீனவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.